புதைந்து கிடக்கும் 'கலைக் கப்பல்' விரோவ் மரியா
ரஷிய ராணியான காத்தரீன் விலைக்கு வாங்கிய பல அரிய ஓவியங்களுடன் இந்தக் கப்பல் பால்டிக் கடலில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மூழ்கி விட்டது. இதனால் அற்புதமான பல கலைப் பொக்கிஷங்களும் கடலில் மூழ்கி விட்டன.
மொத்தம் 300 கலைப் படைப்புகள் அந்தக் கப்பலில் இருந்தனவாம். பிரபல ஓவியர் ரெம்பிரான்ட் வரைந்த ஓவியங்கள் அதில் இருந்தன. இது தவிர விலை மதிப்பிட முடியாத நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், போர்சலின் பொருட்கள் ஆகியவையும் அந்தக் கப்பலில் இருந்தன.
1999ம் ஆண்டு இந்தக் கப்பலை பின்லாந்து நாட்டு கடலியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சர்வதேச கடலியல் சட்டப்படி, இந்தக் கப்பல் பின்லாந்து அரசுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது.
பால்டிக் கடலில் 41 அடி ஆழத்தில் விரோவ் மரியா மூழ்கிக் கிடக்கிறது. எப்படி விழுந்ததோ அதே கோணத்தில், கொஞ்சம் கூட சேதமடையாமல் கப்பல் இருக்கிறதாம். கப்பல் முழுவதும் மெழுகு சேர்ந்து, கிட்டத்தட்ட பதப்படுத்தப்பட்டது போல காணப்படுகிறதாம்.
பல கோடி விலை மதிப்பிலான கலைப் பொக்கிஷங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று தெரியவில்லை. இந்த பொக்கிஷங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் பல வருடமாகவே ரஷ்யாவுக்கும், பின்லாந்துக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
கப்பலை வெளியே கொண்டு வர வேண்டும் என பின்லாந்தை ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் பெரும் செலவாகும் என்பதால் பின்லாந்து அரசு அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் ரஷிய கலாச்சார அமைச்சகம், கப்பலை வெளியே கொண்டு வரும் பணியை ஏற்றுள்ளது. ரஷியாவுக்குத் துணையாக ஸ்வீடன் கலாச்சார துறையும் கை கொடுக்க முன்வந்துள்ளது. இரு நாடுகளும் சேர்ந்து கடலில் மூழ்கிக் கிடக்கும் கலைப் பொக்கிஷமான, விரோவ் மரியா கப்பலை விரைவில் வெளியே கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கவுள்ளன.
கப்பல் வெளியே எடுக்கப்பட்டதும் அதில் உள்ள கலைப் படைப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள ரஷியா மட்டுமல்லாது பின்லாந்து மக்களும் பெரும் ஆவலாக உள்ளனர்.