தமிழுக்கு விடியல்-வைரமுத்து
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு, தமிழுக்கு விடியல் பெற்றுத் தந்திருக்கிறது. நூற்றாண்டுகளின் இருட்டை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உடைத்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் என்ற தமிழக அரசின் ஆணை செல்லுபடியாகும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழ் தலை நிமிர்கிறது.
தமிழ் படிக்க மறுக்கிற அல்லது தயங்குகிற ஒரு தலைமுறையால், அடுத்த நூற்றாண்டில் தமிழின் தொடர்ச்சி அற்றுப் போகுமோ என்ற மானமுள்ள கவலைக்கு மருந்து கிடைத்திருக்கிறது.
தாய்மொழி என்பது வெறும் எழுத்துகளின் அணிவகுப்பல்ல; ஒலிகளின் ஊர்வலமல்ல.
தாய்மொழிதான் ஓர் இனத்தின் அழியாத அடையாளம்; அது கலாசார கருவூலம்.
உலகமயமாதல் என்ற சுனாமியில் அத்தனை அடையாளங்களும் அழிந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில் இன அடையாளமாக எஞ்சி நிற்பது மொழி மட்டும்தான்.
அந்த அடையாளம் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தபோது உச்சமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஊக்கம் தருகிறது. தமிழ் படிப்பதை சட்டக் கடமையாக கருதாமல், தார்மீக கடமையாக தமிழர்கள் கருத வேண்டும்.
திறக்கப்பட்ட ஒரு பாலம்தான் இந்த தீர்ப்பு. பாலமே பயணம் போகாது; பயணிகள் நாம்தான் பயணம் செய்ய வேண்டும்.
தமிழுக்கு செம்மொழிப் பெருமை தந்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், தமிழ் கட்டாயப் பாடம் என்ற கட்டளையும் பெற்றுத் தந்திருக்கிறார். தமிழ் கூறும் நல்லுலகம், அவருக்குத் தலை வணங்கி நன்றி சொல்கிறது.
இனிவரும் நூற்றாண்டுகளில் உலகத்து மொழிகள் எல்லாம் உதிர்ந்து போகக் கூடும். 6 மொழிகள் மட்டுமே காலக்கரையில் தப்பி ஒதுங்கும் என்று, விஞ்ஞான மானுடவியல் எச்சரிக்கிறது.
சீனம், ஆங்கிலம், இந்தி, அரபி, தமிழ், ஸ்பானிஷ் என்ற அந்த 6 மொழிகளுள் தமிழும் இடம் பெறவிருக்கிறது என்பது எதிர்காலக் கணிப்பு.
தமிழ் அப்படி நிச்சயம் நிலைபெறும் என்பதற்கான முதல் நம்பிக்கையின் முதல் தளிராக இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன்.
உணர்வுள்ள தமிழர்கள், இந்த தீர்ப்பை வீட்டுக்கு வீடு கொண்டாட வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் ஊட்டி வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் வைரமுத்து.