புதுக் கல்லறைக்கு மாறும் லெனின்!
1917ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் நடந்த மாபெரும் புரட்சிக்கு வித்திட்டவரான லெனின் 1924ம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் உள்ள கல்லறையில் கண்ணாடிப் பேழையில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் வகையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டது.
சோவியத் யூனியன் 1991ம் ஆண்டு உடைந்து சிதறியது. இதையடுத்து லெனின் உடலை புதைக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து லெனின் உடலைப் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் கட்டப்பட்டு வரும் 53 ஹெக்டேர் பரப்பளவிலான கல்லறைத் தோட்டத்தில் லெனின் உடல் புதைக்கப்படவுள்ளது.
இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
2010ம் ஆண்டு திறக்கப்படவுள்ள இந்த கல்லறைத் தோட்டத்தில் வேறு சில ரஷ்ய தலைவர்களின் உடல்களும் புதைக்கப்படவுள்ளன.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு ெதரிவித்துள்ளனர். செஞ்சதுக்கத்தில் உள்ள கல்லறையிலேயே லெனின் உடல் தொடர்ந்து இருக்க வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 84 ஆண்டுகளாக செஞ்சதுக்கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள லெனின் உடல் முதல் முறையாக வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.