கன்னடர் கண்ணீர் துடைத்தவர் கலைஞர்- வாலி
சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது அவரை மீட்டுக் கொடுத்து கன்னடர்களின் கண்ணீரைத் துடைத்தவர் கலைஞர். அப்போது கண்ணீரை நாம் துடைத்தோம். ஆனால் நமக்கு கன்னடர்கள் தண்ணீர் தர மறுப்பது வேதனை தருகிறது என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.சென்னையில் நேற்று நடந்த தமிழ்த் திரையுலகினரின் உண்ணாவிரதத்தில் கடைசியாக வந்து கலந்து கொண்டார் கவிஞர் வாலி. தனது மோசமான உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் உதவியாளர்கள் துணையுடன் வந்த வாலி உருக்கமாக பேசினார்.
வாலி பேசுகையில், நடிகர், நடிகைகள் நல்ல மனிதர்கள் என்பதை இப்போது நிரூபித்துள்ளனர். நமது நாட்டில் பல இனங்கள் உள்ளன, மொழிகள் உள்ளன. ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிறோம். ஆனால் தற்போது இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் பாரத மாதாவின் புத்திரர்கள் நாம் என்று நானும், வைரமுத்துவும் எழுதுவதில் என்ன பலன் இருக்க முடியும்.
முதல்வர் கருணாநிதி கன்னர்களைப் பற்றி தவறுதலாக பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ளார். இது தமிழர்களைக் காயப்படுத்துவதாக உள்ளது.
எம்.ஜி.ஆர். + சிவாஜி = ராஜ்குமார் என்று கூறப்படும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை மீட்டு கன்னர்களின் கண்ணீரைத் துடைத்தவர் கலைஞர். அப்போது கன்னட மக்களின் கண்ணீரைத் துடைத்தோம். ஆனால் இப்போது அவர்கள் நமக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். இது வேதனை தருகிறது என்றார் வாலி.
நடிகை மனோரமா பேசுகையில், புழுவைக் கம்பால் குத்திக் கொண்டே இருந்தால் அது ஒரு கட்டத்தில் அந்தக் கம்பை கடிக்க ஆரம்பிக்கும். அதற்கு கூட அந்தளவுக்கு உணர்வு இருக்கிறது. அன்று காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தண்ணீர் கொடுத்தான் கரிகால் சோழன். இன்று இவர்கள் யார் நமக்கு தண்ணீர் இல்லை என்று சொல்வதற்கு.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் கலைஞர் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் நிச்சயமாக இதைச் செய்வார். அவர் தமிழன். அவர் நினைத்தால் எதையும் நிச்சயம் செய்து முடிப்பார்.
நதிகளை தேசியமயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தால் ரூ. 1 கோடி தருவதாக தம்பி ரஜினிகாந்த் முன்பு கூறியிருந்தார். அந்தத் திட்டம் வரும் பொன்னாள் வெகு தூரம் இல்லை. அதைப் பார்த்து விட்டுத்தான் நானும் சாவேன் என்றார்.