For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.கேணி ஆகுமா திருவல்லிக்கேணி?!- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
திராவிட இயக்கத்தை உருவாக்கிய முன்னோடித் தலைவர் தியாகராயர் பெயரால் ஒரு பகுதியே விளங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத, வெறுக்கின்ற ஒரு கூட்டத்தார் தான் அதைத் சுருக்கி தி.நகர் என்று வைத்துவிட்டார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அதே போல திருவல்லிக்கேணியை தி.கேணி என்று சுருக்குவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக பிரமுகரின் இல்லத் திருமணத்தை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைத்து கருணாநிதி பேசுகையில்,

நான் பல நேரங்களில் பத்திரிகையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் குறிப்பாக எடுத்துச் சொல்லி வருகிறேன். ஆனால் யாரும் அதைக் காதிலே போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. பத்திரிகைகளில் ஒரு ஊரில் நடைபெறுகின்ற ஒரு சிறு கலவரம்- பாம்பு புகுந்தது - புலி வந்தது- என்ற இந்தச் செய்திகளைப் பத்திரிகைகளிலே போடும்போது,

அதனால் அந்த ஊர் மக்கள் அனைவரும் 'பதட்டம்' அடைந்தார்கள் என்று போடுகிறார்கள். நான் சொல்வேன்- 'பதட்டம்' அல்ல, 'பதற்றம்' என்று போட வேண்டும். 'பதட்டம்' என்று போட்டால் அது தவறு, தமிழ் அல்ல என்று சொல்லியிருக்கிறேன். அப்படியா? என்று கேட்டுக் கொண்டு பத்திரிகையாளர்கள் மீண்டும் மீண்டும் பதட்டமாகவே இருக்கிறார்கள், அதாவது பதட்டம் என்றே போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் போல 'அருகில்' என்றால் அதற்கொரு பொருள், 'மிகவும் கிட்டே' என்று பொருள். இந்த ஒலிபெருக்கிக்கு அருகில் என்றால், இந்த ஒலிபெருக்கிக்குப் பக்கத்தில் என்று அர்த்தம். சில பேர் அருகில் என்றால் பக்கத்தில், 'அருகாமையில்' என்றால் இன்னும் பக்கத்தில் என்று எண்ணிக் கொண்டு 'அருகாமையில்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

'அருகாமையில்'' என்றால் 'தூரத்தில்'' என்று தான் பொருள். கலைஞரும், பாலுவும் அருகாமையில் அமர்ந்திருந்தார்கள் என்றால், உண்மையான தமிழைப் படித்தோர்க்கு என்ன தோன்றும் என்றால் இரண்டு பேருக்கும் கொஞ்சம் விரோதம் போலும், அதனால் பாலு அருகாமையில் அமர்ந்திருக்கிறார், பக்கத்திலே அமரவில்லை என்று எண்ணிக் கொள்வார்கள்.

'அருகாமையில்' என்றால் 'தூரத்தில்' என்று பொருள். 'அருகில்' என்றால்தான் 'பக்கத்தில்' என்று பொருள். இதை நான் எத்தனையோ முறை சொல்லியும் கூட, பத்திரிகையாளர்கள் இவர் என்ன ரொம்ப தமிழ் படித்தவர், நம்மை விடவா? என்கின்ற அந்த எண்ணத்தோடு இன்னமும் 'அருகாமையில்' என்பதைத் தான் பக்கத்தில் என்பதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தி.நகர் ஆன தியாகராய நகர்:

தி.நகர் என்றால் உங்களுக்குத் தெரிகிறது, திருவல்லிக்கேணி என்றால் உங்களுக்குத் தெரிகிறது. ஏன் தி. நகர் என்று பெயர் வைத்தார்கள் தெரியுமா?.

தியாகராய நகர், திராவிட இயக்கத்தை உருவாக்கிய முன்னோடித் தலைவர் தியாகராயர் பெயரால் ஒரு பகுதியே விளங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத, விரும்பாத, இன்னும் சொல்லப் போனால் வெறுக்கின்ற ஒரு கூட்டத்தார், அதைத் தியாகராய நகர் என்று சொல்லி, அவர் பெயரை விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கருதி, அதைச் சுருக்கி தி.நகர் என்று வைத்துவிட்டார்கள்.

பேருந்துகளிலே கூட 'தி.நகர்' என்று தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். நம்முடைய ஆட்சி வந்த பிறகு தான் தியாகராயநகர் என்று முழுப் பெயர் எழுதப்பட்டது.

திருவல்லிக்கேணியை தி.கேணி என்பார்களா?:

கேட்டபோது சொன்னார்கள், அது நீளமான பெயர், அதனால் தான் தி.நகர் என்று எழுதுகிறோம் என்றார்கள். அது நீளமான பெயர் என்றால், திருவல்லிக்கேணியை தி.கேணி என்று எழுதுகிறார்களா? இல்லை.

இவைகள் எல்லாம் விஷமத்தனமானவை. அந்த விஷமத்தனத்தைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவிகள் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X