ஜெயகாந்தன் குறித்த புத்தகம் வெளியீடு
தமிழ் இலக்கிய உலகம் கண்ட தலைமகன்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். அவரது எழுத்து வீரியம், எத்தனையோ பேருக்கு ஆதர்சமாக விளங்கியுள்ளது.
எழுத்துக் கோபம் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதுவதை விட்டு விட்டவர் ஜெயகாந்தன். ஆனாலும் இன்னும் அவரைப் பற்றியும், அவரது எழுத்துக்களையும் பேசிக் கொண்டிருப்பவர்கள், சுவாசித்துக் கொண்டிருப்பவர்கள், வாசித்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணற்றோர் உள்ளனர், உலகின் எல்லா முலையிலும்.
ஞானபீட விருது பெற்ற இந்த தமிழ் மகன் குறித்த ஒரு நூல் வெளியாகியுள்ளது. ஜேகே75 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூல், அவரது 75வது பிறந்த நாளையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
நியூ உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ஜேகே75 நூலை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட, நடிகர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், கவிஞர் இளையபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக வசுந்தரா ராஜகோபாலின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று உலக புத்தக நாள். இதையொட்டி நடந்த ஜெயகாந்தன் குறித்த நூல் வெளியீடு மிகவும் பொருத்தமான நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.