கணினியில் தமிழ்- பொன்முடி!
கணினியில் தமிழ்-விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் பொன்முடி பேச்சு
விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துடன் இணைந்து ஒரு நாள் தமிழ் வலைப்பதிவர் பயிற்சியை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடத்தியது.
இந் நிகழ்ச்சியில் கணிப்பொறியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது,வலைப்பூக்கள் உருவாக்குவது, மின்னஞ்சல், உரையாடல், தமிழ்த் தட்டச்சு செய்வது பற்றி பயிற்சியளிக்கப்பட்டது.
இதில் நூறு பேர் பதிவு செய்துகொண்டு பயிற்சிபெற்றனர். புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
கணிப்பொறி நுட்பம் தெரிந்த பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். பெண்கள் மிகுதியாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
பயிலரங்கில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
தமிழ்க் கணிப்பொறி தொடர்பாகவும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் முதல்வர் கருணாநிதி பத்தாண்டுகளுக்கு முன் தமிழ் இணைய மாநாடு நடத்தினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப் பன்னாட்டு அறிஞர்களை அழைத்துச் சென்னையிலேயே மாநாடு நடத்தினார்.
இன்று கணினியில் தமிழ்ப் பயன்பாடு வந்திருந்தாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தால் தமிழில் பேசாததுதான் காரணம். ஆங்கிலத்தில் பேசும் பிற மொழி மோகம் நமக்கு இன்னும் இருக்கிறது. அதை நாகரிகம் எனக் கருதுகிறோம்.
கணினி பயின்று வெளிநாட்டில் நமது இளைஞர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கிறவர்கள் தமிழைப் பயன்படுத்த முடியாது. சீனாவில் சீனமொழிதான் பயன்பாட்டில் உள்ளது. கணினி- மொழிக்கு அப்பாற்பட்டு வளர்ந்துக் கொண்டிருக்கிற சாதனம். பல்வேறு சமூக மக்களை இணைக்கிற சாதனம்.
கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறைந்தபட்சம் தமிழர்களை இணைக்கவாவது பயன்படும். இந்த முயற்சி தொடர வேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த முயற்சியைக் கொண்டு சென்றால் தமிழ் வளரும். குறிப்பாகக் கல்லூரிப் பேராசிரியர்கள் இதற்கு உரிய முயற்சி எடுக்க வேண்டும்.
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முதுகலை - தகவல் தொழில்நுட்பப் பாடப் பிரிவு தொடங்க உள்ளோம். அதில் இந்த முயற்சியைத் தொடர வேண்டும் என்றார் பொன்முடி.
இரவு 7 மணிவரை நடைபெற்ற பயிலரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ், குறுவட்டுகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி உடனுக்குடன் இணையம் வழியாக உலகெங்கும் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் நண்பர்களுடன் இணைந்து 'கலைஞர்' என்னும் பெயரில் அமைச்சருக்காக ஒரு வலைப்பூவை உருவாக்கினார் (www.ponmudi2008.blogspot.com).