தேவநேய பாவாணர் பேத்திக்கு உதவித்தொகை மறுத்த அவலம்
திண்டுக்கல்: தமிழறிஞர் தேவநேய பாவாணர் பேத்திக்கு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் மறுத்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழறிஞர் தேவநேய பாவாணர் தமிழுக்காக சிறந்த பணியாற்றியவர். அவரது அளவு கடந்த தமிழ்ப்பற்று காரணமாக பாவாணரின் எல்லா நூல்களையும் அரசு நாட்டுமையாக்கி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
தேவநேய பாவாணரின் மூத்த மகன் செல்வராசு. இவரது மகள் எஸ்தர் (40). இவருக்கும் மோசஸ் என்பவருக்கும் திருமணம் ஆகி திண்டுக்கல் அருகே கன்னிவாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
திருமணாமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் கடந்த 2006ல் ஒரு பெண் குழந்தையும், அதற்கு அடுத்த ஆண்டில் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது.
தற்போது எஸ்தரின் குடும்பம் வறுமையான சூழ்நிலையில் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்க கோரி விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், இந்த திட்டத்தின்கீழ், இரு பெண் குழந்தைகளின் தாய் வயது 35க்குள் இருக்க வேண்டும் என்ற விதியை காரணம் காட்டி எஸ்தருக்கு உதவித் தொகை வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதையடு்த்து தனது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு கருணையுடன் உதவி செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகியிடம் மனு கொடுத்து விட்டு நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கிறார் தமிழறிஞரின் பேத்தி.