பொன்னி அரிசிக்கு மத்திய அரசு காப்புரிமை பெற வேண்டும்: விவசாயிகள்
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் தாசில்தார் அலுவலகம் முன்பு கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் கோவை, நாமக்கல், தஞ்சை, திருச்சி, திருவாரூர், ஈரோடு, மாவட்டங்களில் தான் அதிக அளவு பொன்னி அரிசி விளைவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் பொன்னி அரசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சுமார் பல நூறு கோடி ரூபாயக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை வேளாண் பல்கலை கழகம் கடந்த 1986 ம் ஆண்டு சன்னரக பொன்னி அரிசியை கண்டுபிடித்து மத்திய அரசிடம் காப்புரிமை பெற்றது
ஆனால், மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பொன்னி அரிசிக்கு தற்போது காப்புரிமை பெற்றுள்ளது.
இது இந்தியாவின் உரிமையை பாதிப்பதாகும். விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இந்த பிரச்சனையில் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இந்த நிலையை மத்திய அரசு உடனே கைவிட்டு பொன்னி அரிசி காப்புரிமையை மீட்டுத்தர வேண்டும்.
அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் கூறினார்கள்.