காந்தி சிலையை அவமதித்த துஸ்ஸாத்!
லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகம் மிகவும் புகழ் பெற்றது. பல்வேறு நாடுகளின் பிரபலங்கள், தலைவர்கள், நடிகர், நடிகையர் உள்ளிட்டோரின் முழு உருவ மெழுகுச்சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் மெழுகுச் சிலையும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு காந்தியின்சிலை, குப்பைத்தொட்டிக்கு அருகே இடமாற்றம் செய்யப்பட்டது.
இது இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருங்காட்சிய நிர்வாகிகளின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு கடிதங்கள் பறந்தன.
இதையடுத்து துஸ்ஸாத் அருங்காட்சிய நிர்வாகத்திற்கு இந்திய அரசு கடிதம் எழுதியது. அதில், மகாத்மா காந்திக்கு நேர்ந்த அவமரியாதை உடனடியாக களையப்பட வேண்டும். பழைய இடத்திலேயே காந்தி சிலை வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது காந்தி சிலை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டு விட்டது. தவறுதலாக குப்பைத்தொட்டிக்கு அருகே காந்தி சிலை வைக்கப்பட்டு விட்டதாகவும், அதற்காக இந்தியர்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக துஸ்ஸாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.