ஒலிம்பிக்கில் ஒலிக்கும் தமிழரின் இசை!
விளம்பரப் பட உலகின் முன்னணியில் உள்ள லேகா ரத்னகுமார் ஏசியா டுடே எனும் பெயரில் உருவாக்கிய 3 டிராக்குகளை தனது கூட்டு நிறுவனமான சொனோட்டான் மூலம் ஒலிம்பிக்கில் ஒலிக்க வைக்கப் போகிறார்.
ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவின் துவக்கநாள் மற்றும் இறுதி விழா ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாது, போட்டி நடக்கும் 15 நாட்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் பின்னணியில் சிறப்பு இசை முழங்கிக் கொண்டே இருப்பதுபோல இம்முறை போட்டிகளை வடிவமைத்துள்ளனர்.
இதற்கான இசை டிராக்குகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சொனோட்டன் நிறுவனம் வழங்கியுள்ளது. அப்படி வழங்கப்பட்டுள்ள டிராக்குகளில் மூன்று தமிழகத்தைச் சேர்ந்த லேகா ரத்னகுமார் உருவாக்கியது. இந்த மூன்று டிராக்குகள் தவிர 'ஃபோகஸ் ஆன் ஏசியா' எனும் பெயரில் இவர் மற்ற கலைஞர்களோடு சேர்ந்து உருவாக்கிய டிராக்கும் இடம் பெற்றுள்ளது.
இவா தவிர மேலும் ஏராளமான டிராக்குகளை ஒலிம்பிக் கமிட்டிக்கு வழங்கியுள்ளது சொனோட்டான்.
மேலும் இப்போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளி-ஒலிபரப்ப உள்ளனர். அதிலும் இந்த சொனோட்டான் இசைதான் ஒலிக்கப் போகிறது.