சிறந்த கவிஞர்களுக்கு கண்ணதாசன் விருது வழங்க கோரிக்கை
மதுரை: சிறந்த கவிஞர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு கண்ணதாசன் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று அமுதசுரபி கலை மன்றம் கோரியுள்ளது.
மதுரை அமுதசுரபி கலைமன்றம் சார்பில் கவியரசு கண்ணதாசன் 82வது பிறந்த நாள் விழா, இலவச கவிதை புத்தகம் வழங்கும் விழா மன்றத் தலைவர் வீ.பாலகிருட்டிணன் தலைமையில் மஞ்சணக்காரத் தெரு, சாமி ஆசாரி சந்து, மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மன்ற அமைப்பச் செயலாளர் என்.சுரேஷ்பாபு வரவேற்று பேசினார்.
கவியரசு கண்ணதாசன் படத்திற்கு மன்றத்தலைவர் வீ. பாலகிருட்டிணன் மாலை அணிவித்துப் பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை எம்.லில்லி புஷ்பம், உதவி தலைமை ஆசிரியர் ஏ.ஜோசப் ஜெயசீலன் மன்ற துணைச் செயலாளர்கள் எஸ். கந்தசாமி, தெ.முரளி, எஸ்.லெட்சுமி காந்தன், சிவசங்கர குமார், நிர்வாகிகள் கண்ணன், ஆர்.பாபு ராஜேந்திரபிரசாத், உதய அரசு மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்பு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக கண்ணதாசன் எழுதிய பகவத் கீதை புத்தகத்தை மன்றத் தலைவர் வீ. பாலகிருட்டிணன் வழங்கினார். பள்ளி மாணவிகள் அனைவருக்கும் மன்றத் துணைச் செயலாளர் எஸ். கந்தசாமி இனிப்புகளை வழங்கினார்.
விழாவில், ஒவ்வொரு ஆண்டும் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் தமிழகத்திலுள்ள சிறந்த கவிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கண்ணதாசன் பெயரில் விருது வழங்கியும், பொற்கிழி வழங்கியும் கௌரவிக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழ் திரைப்படங்களில் வரும் பாடல்கள் ஆங்கிலம் மற்றும் பிறமொழி கலப்பில்லாத பாடல்களாக இருக்க வேண்டும் என்றும் நல்ல தமிழ் சொற்கள் உள்ள பாடல்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி திரைப்பட பாடல் ஆசிரியர்களையும், இயக்குனர்களையும் மன்றம் கேட்டு கொள்ளும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. விழா முடிவில் உதய அரசு நன்றி கூறினார்.