மாதந்தோறும் 5000 இந்தியர்கள் பஹ்ரைன் வருகை
பஹ்ரைனுக்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பஹ்ரைனில் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். பஹ்ரைன் நாட்டு மக்கள் தொகையே 7 லட்சத்து 53 ஆயிரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை பஹ்ரைனுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். சில ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைனில் 1 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்களே இருந்தனர்.
இந்தியத் தொழிலாளர்களின் நல்லொழுக்கம், குணநலம் உள்ளிட்டவை காரணமாக பஹ்ரைனில் இந்தியர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால்தான் இதுவரை இல்லாத அளவு, அதிக அளவிலான இந்தியர்கள் பஹ்ரைனில் குவிந்து வருகின்றனர்.
சமீப காலமாக வங்கதேசத்தவரை வேலைக்கு எடுப்பதை பஹ்ரைன் நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. காரணம், வங்கதேசத்தவர் பெருமளவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை பஹ்ரைனியர்கள் விரும்புவதில்லை. இது இந்தியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
கடந்த ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைந்த பொது மன்னிப்புகாலத்தில் முறையான விசா, வேலை பெர்மிட் இல்லாமல் தங்கியிருந்த 8000 இந்தியர்கள் நாடு திரும்பினர். இருப்பினும் 22 ஆயிரம் பேர் தங்களது விசாவை முறைப்படுத்திக் கொண்டு பஹ்ரைனிலேயே தங்கி விட்டதாக ஷெட்டி தெரிவித்துள்ளார்.
--