கவிஞர் சுகுமாரனுக்கு இலக்கிய விருது
2008-ம் ஆண்டுக்கான சிற்பி அறக்கட்டளை விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சியிலிருந்து இயங்கிவரும் சிற்பி அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் 2008 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இவ்விருதுக்காக கவிஞர் சுகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்ட இவ்விருது, அவருடைய பூமியை வாசிக்கும் சிறுமி என்ற கவிதை நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் வைகைச் செல்விக்குக் கிடைத்திருக்கிறது. ரூ.5 ஆயிரம் ரொக்கமும் சான்றிதழும் கொண்ட இப்பரிசு அவருடைய அம்மி என்ற கவிதை நூலுக்காக வழங்கப்படுகிறது.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு முன் கவிஞர் அப்துல் ரகுமான், பழமலய், சி.மணி, தேவதேவன், புவியரசு, தமிழன்பன் ஆகிய கவிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.