பெஸ்ட் ஆப் தி புக்கர் விருதை வென்றார் சல்மான் ருஷ்டி
இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் 'மிட்நைட்'ஸ் சில்ட்ரன்' சிறந்த நூலாக தேர்வுசெய்யப்பட்டு அதற்கு பெஸ்ட் ஆப் தி புக்கர் விருது கிடைத்துள்ளது.
ஜூலை 8ம் தேதியுடன் முடிவடைந்த வாக்கெடுப்பில் ருஷ்டியின் நூலுக்கு 7801 வாக்குகள் கிடைத்தன. பதிவான வாக்குகளில் 36 சதவீத வாக்குகள் ருஷ்டியின் நூலுக்குக் கிடைத்தன. மொத்தம் 6 நூல்கள் இதில் கலந்து கொண்டன. 27 ஆண்டுகளுக்கு முன்பு 'மிட்நைட்'ஸ் சில்ட்ரன்' நூலை எழுதினார் ருஷ்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ருஷ்டிக்கு அதிக அளவிலான ஆதரவு இங்கிலாந்திலிருந்துதான் கிடைத்துள்ளது. இங்கிருந்து 37 சதவீத வாக்குகளும், வட அமெரிக்காவிலிருந்து 27 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. அவருக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுதொடர்பாக லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், ருஷ்டியால் கலந்து கொள்ள இயலவில்லை. அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், தனது நன்றிச் ெசய்தியை ஆடியோவில் பதிவு செய்து நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அனுப்பியிருந்தார். அது நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது.
அந்த செய்தியில், அருமையான செய்தி. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது 'மிட்நைட்'ஸ் சில்ட்ரன்' நூலுக்காக வாக்களித்த அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள் என்று கூறியிருந்தார் ருஷ்டி.
விழாவில், பரிசைப் பெறுவதற்கு ருஷ்டியின் மகன்களான ஜபர், மிலன் ஆகியோர் வந்திருந்து பெற்றுக் கொண்டனர்.
புக்கர் பரிசின் 40வது ஆண்டையொட்டி பெஸ்ட் ஆப் தி புக்கர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.