கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி
பெங்களூர்: தாய் தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் போராடி உயிர் நீத்த தமிழர்களின் நினைவாக, கோலார் தங்க வயலில் ஞாயிற்றுக் கிழமை எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இது தொடர்பாக கர்நாடக மாநில தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.ராஜன், பொதுச் செயலாளர் ஆரோக்கிய நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகத்தில் மொழிக் கொள்கை, கன்னடர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்த மறைந்த குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு 1982-ம் ஆண்டு அமல்படுத்தியது.
இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது. இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்க உரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில் இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்தது. அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்க முயன்றது. போராட்டம் நடத்திய தமிழர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.
காவல் துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டு உரிமைக்காக தமிழர்கள் தொடர்ந்து போராடினர். இதனால் குண்டுராவ் அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அடக்க உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன் ஆகியோர் குண்டுபாய்ந்து இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை. அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15 பேர்.
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தமிழுக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 27-ம் தேதி எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு எழுச்சி நாள் பேரணி மற்றும் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தங்க வயலில் நடைபெறுகிறது.
பேரணி காலை 10 மணிக்கும், மாநாடு பகல் 12.30 மணிக்கும் நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.