விரல் அளவு குறள் படைத்த சாதனை இளைஞரின் வேதனை!
ஸ்ரீவில்லிபுத்தூர்: உள்ளங்கை அளவிலான திருக்குறள் நூலை உருவாக்கி சாதனை படைத்த ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் எந்தவிதமான ஊக்கமோ, ஆதரவோ தனக்கு கிடைக்காததால் பெரும் மன வேதனையில் ஆழ்ந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியகுடி தெருவைச் ேசர்ந்தவர் மணிகண்டன். 27 வயதான இந்த இளைஞர் தங்க நகை பட்டறை வைத்துள்ளார். கைக்குக்கிடைக்கும் பொருட்களையெல்லாம் விதம் விதமான உருவங்களை வடிப்பது இவரது வாடிக்கை.
110 கிராம் வெள்ளியில் சிறிய மோட்டார் பைக், 163 கிராம் வெள்ளியில் டேபிள் பேன் என பல வித்தைகளைப் படைத்துள்ளார் மணிகண்டன். இப்படியே குட்டி குட்டியாக செஸ் போர்டு, கைக் கடிகாரம் உள்ளிட்டவற்றைப்ப டைத்து லிம்கா சாதனைப் புத்தகத்திலும் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் மணிகண்டன். திருக்குறள் நூலை, 16 மில்லிமீட்டர் நீளம், 11 மில்லி மீட்டர் அகலத்தில் குட்டியாக உருவாக்கியுள்ளார். உள்ளங்கைக்குள் இதை அடக்கி விடலாம்.
தினசரி 10 முதல் 15 திருக்குறள்களை பென்சிலால் எழுதி ஒரு பக்கத்திற்கு 5 குறள் வீதம் 280 பக்கங்களில் இந்த குட்டி திருக்குறளை வடித்து முடித்துள்ளார். 6 மாத காலம் இதற்குப் பிடித்ததாம் மணிகண்டனுக்கு.
தனது சாதனை குறித்து மணிகண்டன் கூறுகையில், இதற்கு முன்பு திருக்குரான் நூலை 17 மில்லிமீட்டர் நீளம், 11 மில்லி மீட்டர் அகலத்தில் எழுதியதே சாதனையாக உள்ளது. தற்போது அதை நான் முறியடித்துள்ளேன் என்கிறார்.
இவர் இதற்கு முன்பு 99 முறை கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளாராம். தற்போது 100வது சாதனையாக மிகச் சிறிய வெள்ளியினால் ஆன செஸ் போர்டை வடித்துள்ளதாக பெருமையாக கூறியுள்ளார்.
மணிகண்டனுக்கு உள்ள ஒரே வேதனை என்னவென்றால் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை இந்த சாதனை முயற்சிகளுக்காக செலவிடுகிறேன். ஆனால் அரசோ அல்லது பிறரோ எனக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை.
விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு லட்சக்கணக்கான பணத்தை அள்ளித் தருகின்றன. வீடு, வேலை, நிலம் என பல சலுகைகள் குவிகின்றன.
ஆனால் என்னை போன்ற சாதனை படைக்கும் இளைஞர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் எங்களை போல் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதனை படைத்த இளைஞர்களை பாராட்டுவதோ, விழா எடுப்பதோ இல்லை என்பது வேதனையான செய்தி.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் அரசு கின்னஸ் சாதனை படைத்த எங்களையும் உற்சாகப்படுத்த வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.
குட்டிக் குறள் வடித்த மணிகண்டனின் இந்த வேதனைக் குரல், உரியவர்களின் காதுகளை அடைந்தால் நலமாக இருக்கும்.