சேவை- தமிழக இளைஞருக்கு ஐ.நா. விருது
தேனி: கம்பத்தைச் சேர்ந்த சலீம் கான் ஐ.நா. சபையின் இளைஞர் பிரசார விருதினை பெற்றுள்ளார்.
இவர் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் ஓய்வு பெற்ற நூலகர் அம்சத் இப்ராகிம் கானின் மகன் ஆவார்.
ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதிலுமுள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவில் உள்ள ஐ.நா தலைமை செயலகத்தில் நடத்துகிறது.
இதில், இந்தியாவின் சார்பாக சலீம் கான் தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்.எஸ்.சி பயோ டெக்னாலஜி படித்துள்ளார்.
நிலையான சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு மாங்குரோவ் மரங்களை கடற்கரை ஓரங்களில் வளர்க்க வேண்டுமென சலீம் கான் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மில்லினியம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்களித்ததற்காகவும், மனித நேயத்திற்காகவும் ஐ.நாவில் முதன்முறையாக யூத் சேம்பைன் அவார்டு என்னும் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவர் சார்பாக அவரது சகோதரர் நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா செயலகத்தில் விருது வாங்கி சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.