வானொலியில் பசுமை!
திண்டுக்கல்: தமிழகத்தில் புகழ் பெற்ற எப்.எம். வானொலிகளுக்கு மத்தியில் சத்தமின்றி ஒரு புதிய புரட்சியாக பசுமை வானொலி கிராம மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகிறது.வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள அதிக குக்கிராமங்களை கொண்ட ஒரு மாவட்டம் திண்டுக்கல்.
பசுமை எப்.எம். 90.4:
பசுமையின் தாயகமான கிராமங்களில் கிராம மக்கள் விரும்பி கேட்கும் ஒரு வானொலியாக இப்போது பசுமை எப்.எம் 90.4 துவங்கப்பட்டுள்ளது.
சூரியன் எப்.எம், கோடை எப்.எம், ஆல் இண்டியோ ரேடியோ, ரெயின்போ எப்.எம் போன்ற பல வானொலிகளுக்கு மத்தியில் பசுமை உதயமாகியுள்ளது சமுதாய வானொலி. அதன் ஒரு பகுதிதான் பசுமை எப்.எம்.
ஒரு சிலரது வீட்டில் எப்.எம். என்றாலே அலர்ஜி. காரணம் சினிமா பாட்டு, குத்துப்பாட்டு, அரட்டை அரங்கம், என பொன்னான நேரத்தை வீணடிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் இருக்கும்.
ஆனால் இந்த பசுமை வானொலியில் பொது மக்களுக்காக சுற்றுச்சூழல், மருத்துவம், கலாச்சாரம், தொழிற்கல்வி, குழைந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகள் கல்வி, மனித உரிமைகள், என விழிப்புணர்வு தரும் நிகழ்சிகள் மட்டுமே இதன் தாரக மந்திரம்.
இந்த எப்.எம்-ல் மற்றாரு சிறப்பம்சம், கல் உடைக்கும் தொழிலாளி முதல், விவசாயக்கூலி தொலாளிகள் வரை பலரும் தங்களது உள்ள உணர்வுகளை நெஞ்சம் நெகிழ வெளிப்படுத்திவருவது தான்.
விளிம்பு நிலை மக்களான தலித்துக்கள், பெண்கள், விவசாயக் கூலிகள், என படிக்காத மேதைகள் தங்கள் பகுதி பிரச்சனைகள் பற்றி பரிமாறிக் கொள்வதற்கும், தங்களது குரலை உயர்த்திச் சொல்லவும் பசுமை எப்.எம். ஒரு தூண்டுகோலாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், உள்ள 25 கிலோ மீட்டர் சுற்றளவில் பல ஆயிரம் மக்கள் தினசரி தங்களது வாழ்க்கை முறையை கற்றுக் கொள்ளவும், நட்பை பலப்படுத்திக் கொள்ளவும், இந்த வானொலி விழிப்புணர்வு மேடையாக பயன்பட்டு வருகிறது.
ஒரு நாளின் சராசரி நேரமான 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் இடைவிடாமல் தனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது பசுமை எப்.எம்.
குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழு தொடங்குவது எப்படி, நிர்வகிப்பது எப்படி, வங்கியில் கடன் பெறுவது எப்படி, அதை எப்படி திருப்பி செலுத்துவது, என்று சொல்லும், குறிப்புகள் பாராட்டதக்கவைகள் ஆகும். காரணம் இவைகள் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தி தலை நிமிற வைக்கின்றது என்பதால்தான்.
அத்துடன் மகளிர் பிரச்சனைகள் எப்படி உருவாகின்றன. அதை எப்படி தீர்ப்பது, அத்துடன் மது என்ற அரக்கன் பிடியில் இருந்து இளைஞர்களையும், மதுவுக்கு அடிமையானவர்களையும் மீட்டெடுப்பது எப்படி என்று அற்புதமான தகவல்கள் மதிப்புமிக்கவை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அபூர்வமாக இருந்த வானொலி, வண்ணத் தொலைக் காட்சி வரவால் தொலைந்து போனது. ஆனால் வானொலியின் தன்மை காரணமாக இன்று தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலும், பஸ், டீக்கடை, போன்ற மக்கள் அதிகம் உள்ள இடங்களிலும், ஏன், பலரும் விரும்பி உபயோகப்படுத்தப்பட்டும் செல் போனில் கூட ரேடியோ கேட்கும் அளவு பிரசித்தம் பெற்றுள்ளது.
இந்த வானொலியின் நிறுவனரும், சமூக ஆர்வலருமான பால்பாஸ்கர் கூறியதாவது:
மக்கள் விரும்பும் ஊடகங்களில் வானொலி ஒரு நல்ல சாதனம். காரணம் வானொலியால் யாருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை.
நாம் நமது வேலை செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டே ரேடியோவில் நல்ல கருத்துக்களையும், தகவல்களையும் கேட்கமுடியும். சாதாரணமாக வயலில் பெண்கள் நாட்டு நடும் போது கூட கேட்க முடியும்.
ஒரு மனிதனுக்கு முக்கிய தேவை ஆரோக்கியமான சுற்றுச்சூழலே. அதனால் தான் சுற்றுச்சூழலை நினைவு படுத்தும் விதத்தில் பசுமை எப்.எம் என்று பெயர் வைத்தோம்.
பெண்கள் உரிமை, குழந்தைக் கல்வி, மனித உரிமை, கடல் கடந்து அயல் நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தேவையான தகவல்கள் போன்ற மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை செய்து வருகிறோம் என்கிறார்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது, மனித உரிமைக்கான பியான் விருது, இலண்டன் பாடிஷாப் வழங்கிய ரொக்க பரிசுடன் கூடிய சர்வதேச மனித உரிமை விருது, மற்றும் குழந்தைகள் நோபல் பரிசு என்றழைக்கப்படும் ஸ்வீடன் நாட்டு அரசியார் வழங்கிய உலகக்குழந்தை விருது போன்றவைகள் இவரது சமூக பணிகளுக்கான அங்கீகாரம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், 90.4யை சமுதாய வானொலியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்கள் யார் வேண்டுமென்றாலும், ஏன் நீங்கள் கூட இதை உருவாக்கி செயல்படுத்த முடியும்.