பிற மொழி வெறுப்பு வேண்டாம்-ஜெயகாந்தன்
தஞ்சையில், தமிழ் பல்கலைக்கழக 28 வது ஆண்டு தொடக்க விழா, அண்ணாத்துரை நூற்றாண்டு விழா, உலகத்தமிழ் சங்க நற்றமிழ் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.மாவட்ட கலெக்டர் சண்முகம் அகராதி இயல் என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை திருச்சி பாரதிசாதன் பல்கலைக்கழக துணை வேந்தர் பொன்னவைக்கோ பெற்றுக் கொண்டார்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் முதல் முன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்பு அவர் பேசுகையில், நாம் அனைவரும் தமிழை முதலில் சுத்தமாக பேச வேண்டும். ழ என்ற எழுத்து தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு.
இதை நாம் அனைவரும் தெளிவாக உச்சரிக்க வேண்டும். நாம் நமது மொழியை காப்பாற்றுகிறோம் என்பதற்காக மற்ற மொழிகள் மீது வெறுப்பு காட்டக் கூடாது.
நம்மை ஆட்சி செய்த மேலை நாட்டவரின் உடையை அணிந்து கொண்டு தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதில் என்ன பயன் உள்ளது.
நமது மொழியின் பெருமை மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைத்து மொழிகளையும் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற மொழிகளில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொண்டால் தான் நமது தாய் மொழி சிறப்பை உணர்ந்து கொள்ள முடியும் என்றார் ஜெயகாந்தன்.