பாலியல் தொந்தரவு தடுப்பு குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும்: ஞாநி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில் வரும் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முன்னிட்டு 12 சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.
பணியிடங்களில் பெண்கள் எனும் கருத்தரங்கம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. துணை வேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஞாநி பேசியதாவது:
விவசாய தொழிலில் ஈடுபடும் பெண்கள்தான் அதிகமாக பாலியல் கொடுமைகளில் சிக்கி தவிக்கின்றனர். நாகரீகம் என்ற பெயரில் பெண்களிடம் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பெண்களுக்கு பாலியல் கொடுமைகளுக்கு எதிரான பயிற்சி அளிக்க தவறிவிட்டோம்.
இதுபோன்ற தருணங்களில் பெண்கள் அழுது விடுகின்றனர். அழுகை என்பது பயமல்ல. அழுகையை கோபத்தின் வெளிப்பாடு என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் பாரதி சொன்னது போல் அச்சம் தவிர்; ரௌத்ரம் பழகு என்பதை பெண்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் நடவடிக்கைகளை குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண் குழந்தைகளை சமையலுக்கும், ஆண்களை வருமானம் ஈட்டுவதற்கும் தயார் செய்யும் நிலையை கைவிடவேண்டும்.
நம் சமூகத்தில் ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். பெண்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதனை மாற்ற வேண்டும் என்றார்.