செல்போனி்ல் நேர விரயம் வேண்டாம்-வைரமுத்து
யுனிவர்செல் செல்போன் விற்பனை நிறுவனத்தின் தமிழ் இணையத் தளத்தை தொடங்கி வைத்து வைரமுத்து பேசுகையி்ல்,
சீனாவை விட இந்தியா எந்த அளவு முன்னேறி இருக்கிறது என்று கேள்வி கேட்டால், ஒரு விஷயத்தில் முன்னேறி இருக்கிறது என்று சொல்லலாம். ஜனத் தொகையில் நாம் முன்னேறவில்லை. தொழில் போட்டியில் கூட சீனா முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், சீனாவை இந்தியா வென்றுவிட்டது என்று சொல்வதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால், 30 கோடி மக்களால் செல்போன் பயன்படுத்துகின்ற நாடு உலகத்திலேயே இந்தியா மட்டும் தான்.
நான்கில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் செல்போன்கள் பயன்படுத்துகிறார்கள். இது இன்னும் வளரும் என்கிறார்கள். 60 கோடி மக்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
கிராமத்தில் பார்த்தால் கீரை விற்கிற பெண், தென்னை மரம் ஏறுபவன், களை எடுக்கிற பெண் எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
களை எடுக்கப் போகிற ஒரு பெண் கழுத்தில் செல்போன் போட்டு செல்கிறார். எதற்கு என்று அவரிடம் கேட்டால், இது கூட இல்லாமல் எப்படி களை எடுக்க போவது, சாயந்திரம் வந்து வீட்டில் எப்படி உலை வைப்பது என்று கேட்கிறார்கள். கழுத்தில் தாலி தானே கிடக்கும், ஏன் செல்போன் தொங்குகிறது என்று கேட்டால், தாலியை விற்றுத் தானே செல்போன் வாங்கினேன் என்கிறார்.
எனக்கு 40 வயதில் தெரிந்த உலகத்தை, இன்றைய குழந்தைகள் 15 வயதிலேயே தெரிந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் தொழில்நுட்ப புரட்சியால் கிடைத்த செல்போன் போன்ற சாதனங்கள்.
ஒரு தீவில் ஒரு தென்னை மரம் நடப்பட்டது. 5 வருடம் கழித்து அதில் குலை தள்ளியதும், அதில் உள்ள தேங்காயை பறிக்க அடிமரத்தை வெட்டினார்களாம். ஏறி பறிக்க வேண்டும், அது இன்னொரு முறை காய்க்கும் என்ற அறிவு இல்லாத தலைமுறை அது. அறிவு இருந்திருந்தால் தென்னை மரத்தில் ஏறி பறித்திருப்பான்.
செல்போன் வந்த பிறகு நாட்டில் கலாச்சாரம் மாறியிருக்கிறது. வாழ்க்கையின் அம்சம் மாறியிருக்கிறது. தொலைபேசி விற்பனையும் இந்தத் துறையும் ஏன் வளர்கிறது என்றால், 3 ஆண்டுகளுக்கு மேல் யாரும் பழைய செல்போன்களை வைத்துக் கொள்வதில்லை. மாற்றி விடுகிறார்கள்.
அதே நேரத்தில் செல்போன்களை ஆக்கப்பணிக்கு பயன்படுத்த இந்தியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நேர விரயத்தை கட்டுப்படுத்தவும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.