தமிழக விஞ்ஞானிக்கு செளதி இளவரசர் விருது
இந்த முயற்சியில் உலகெங்கும் பல்வேறு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இந்த பந்தயத்தில் டாக்டர்.வ.மாசிலாமணி என்ற தமிழக விஞ்ஞானி ஒரு அற்புத சாதனைப் படைத்து செளதி இளவரசர் நாயிஃபாவிடம் பரிசும் பட்டயமும் பெற்றுள்ளார்.
பரிசுத் தொகை இந்திய மதிப்பில் ஆறரை லட்சம் ரூபாய். அவருக்கும், அவருக்குத் துணையாக இருந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் பாராட்டி, பரிசுகள் வழங்கி ரியாத் செளதி மன்னர் பல்கலைகழகம் விழா நடத்தி சிறப்பு செய்தது.
அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கௌரவம் இது. முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒரு தமிழக விஞ்ஞானி. இந்தியாவும்- குறிப்பாய் தமிழகமும் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.
மாசிலாமணி அப்படி என்னதான் செய்தார்?:
இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர் மூலக்கூறுகளை லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்தார். இதேபோல் அதிகாலையில் வரும் முதல் சிறுநீர்த் துளியின் மூலக் கூறுகளையும் பகுத்தெடுத்தார். இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நோயற்றவர்களிடம் இல்லாத சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தன. இதைக் கொண்டு புதிதாக மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதியக் கருத்தமைவை (Technique) கொண்டு வந்தார்.
இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா, இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா என்பன போன்ற பல விஷயங்களை கணிக்க முடியும். இந்தப் புதிய முறை இந்திய மத்திய அரசின் ICMRல் தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையின் தொடர் ஆராய்ச்சிக் காரணமாகத்தான் நுரையீரல் புற்று நோயை மட்டும் தனித்துக் காட்டும் உயிர் மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார். இந்த முறையின் நம்பகத்தன்மை (Reliablity) 80% என்பதும் இதுவரையில் இத்தகைய்ய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய முறையின் துணைக் கொண்டு நுரையீரல் புற்று நோயின் துவக்க நிலையைக் கண்டறிவது மட்டுமன்றி தொடர்ந்து பலகாலம் புகை பிடித்துக் கொண்டிருப்பவரில் யாருக்கு இந்நோய் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் நிர்ணயித்து எச்சரிக்கை மணி அடிக்க முடியும்.