வட மொழிப் பெயர் மோகம்!
தமிழகத்தில் வடமொழிப் பெயர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. இங்குதான் இந்த நிலை, மற்ற மொழிகளில் இப்படி இல்லை. தமிழ் இயக்கங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்று விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை, வேலூர் திருக்குறள் இயக்கம் ஆகியவை இணைந்து 'உலக மயமாக்கலால் ஏற்படும் பாதிப்புகள்' குறித்த கருத்தரங்கம், நாடகம், விருது வழங்கல், திருக்குறள் சொல்லரங்கம் ஒருங்கிணைந்த விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
வேலூர் அண்ணா கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் விஸ்வநாதன் பேசியதாவது:
தமிழகத்தில் இன்றைக்கு பெரும்பாலும் வடமொழிப் பெயர்களைச் சூடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பிற தென்னிந்திய மொழிகளில் கூட இந்த நிலையில்லை. இது மிகவும் ஆபத்தான போக்கு. நமது அடையாளத்தை இழக்கக் காரணமாக அமைந்துவிடும்.
திருக்குறளில் இல்லாத கருத்துக்களே இல்லை. எல்லோரும் உண்மை பேசுவது என்று முடிவெடுத்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
தமிழ் உணர்வு இருப்பதால்தான், இலங்கையில் தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கும் போது நம்மால் கண்ணீர் விடவும், ஆதரவுக் குரல் கொடுக்கவும் முடிகிறது என்றார்.
காலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சி. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
செயலர் இரா.ப. ஞானவேலு வரவேற்றார். இதில் மாநில தலைவர் த. வெள்ளையன், மக்களவை உறுப்பினர் பி. மோகன், சிபிஎம் மாவட்ட செயலர் ஏ. நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.
பிற்பகல் விருது வழங்கும் விழாவை வேந்தர் ஜி. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். த. வெள்ளையனுக்கு திருவள்ளுவர் விருதும், சி. கிருஷ்ணனுக்கு கி.ஆ.பெ. விஸ்வநாதன் விருதும் கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளால் வழங்கப்பட்டது.
திருவள்ளுவர் காலத்து அரசியலும், நிகழ்கால அரசியலும் என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை கவிஞர் ச.இலக்குமிபதி தொகுத்து வழங்கினார். திருக்குறள் இயக்கச் செயலாளர் ச. இளவழகன் நன்றி கூறினார்.