திருப்பூரில் 'ஒரே இந்தியா' கலாசார விழா
நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 7 மாநில கலைஞர்கள் பங்கேற்கும் "ஒரே இந்தியா' கலாசார விழா திருப்பூரில் டிசம்பர் 25ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
திருப்பூர் சேவா சமிதி, அமுல் நிறுவனம் இணைந்து இந் நிகழ்ச்சியை நடத்துகிறது.
விழா குறித்து திருப்பூர் சேவா சமிதி தலைவர் முராரிடோடி செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மக்கள் திருப்பூரில் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் மாநில கலாசாரத்தை சிறிது சிறிதாக மறந்து வருகின்றனர். ஆகவே ஒவ்வொரு மாநில கலாசாரத்தையும், கலை, உணவு பழக்க வழக்கங்களையும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், குஜராத், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த இசை, நடனம், உணவு வகைகள், பண்பாட்டு நிகழ்வுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. இதற்காக அதே மாநிலத்தில் அந்தந்த துறையில் சிறப்பு பெற்ற கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.