மூடிக் கிடக்கும் கதர், கிராம தொழில்கள் அலுவலக கட்டடம்
தர்மபுரி: தருமபுரியில் பயன்பாடின்றி 2 ஆண்டுகளுக்கு மேலாக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலக கட்டடம் மூடிக் கிடக்கிறது.
தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த கதர் மற்றும் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலகம் கட்டடம் 2 ஆண்டுகளுக்கு முன் சேலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதையடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய இக்கட்டடம் பயன்பாடின்றி போனது.
அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். ஆள்குறைப்பு காரணமாக பல ஊழியர்கள் வேலையை இழந்தனர்.
அதனால் அலுவலகம் சேலத்துக்கு மாற்றப்பட்டது என்று கூறுகின்றனர்.
அரசு அலுவலகங்கள் பல வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் பயன்பாடின்றி மூடிக் கிடக்கும் கட்டடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.