பேருந்துகளில் தமிழில் பயணச்சீட்டு
சென்னை: சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளி்ல் தானியங்கி இயந்திரங்கள் மூலம் தமிழில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகள் வழங்குவது நடைமுறைக்கு வந்துள்ளது.
மாநகர பஸ்களில் பயணச் சீட்டுகள் வழங்கும் முறையை எளிதாக்கும் வகையில், தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் நடத்துநர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
ஆனால், இந்தப் பயணச் சீட்டுகளில் அனைத்து வாசகங்களும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருந்தன. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்து மாநகர பஸ் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்ட 2,850 இயந்திரங்களிலும் உள்ள சிம்கார்டில் தமிழில் பயணச்சீட்டுகளை அச்சிட்டு வழங்கும் வகையில் படிப்படியாக தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த இயந்திரங்களை வடிவமைத்த பெங்களூர் நிறுவனத்துக்கு முதற்கட்டமாக 850 இயந்திரங்கள் அனுப்பப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணச் சீட்டுகள் அச்சிட்டு தற்போது பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
வரும் பொங்கல் பண்டிகைக்குள் அனைத்து இயந்திரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணச் சீட்டுகள் அச்சிட்டு வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ராமசுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.