2008ன் முக்கிய சம்பவங்கள்!
13. நெகிழ வைத்த உறுப்பு தானம்
தமிழக மக்களை நெகிழ வைத்தனர் ஹிதேந்திரனின் பெற்றோர். அவர்கள் செய்தது சாதாரணமானதல்ல, தங்களது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து உயரிய இடத்தைப் பிடித்தனர். இதுபோன்ற தானங்களுக்கு பிள்ளையார் சுழியும் போட்டு வைத்தனர்.
சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதியின் ஒரே மகன்தான் ஹிதேந்திரன். செப்டம்பர் 20ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார் ஹிதேந்திரன்.
மூளை செயலிழந்தது. இனியும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறி விடவே, சட்டென சுதாரித்த அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதிகள், தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுக்கின்றனர்.
இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம் முதலியவற்ற செப்டம்பர் 21ம் தேதி தானமாக வழங்கினர். இதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு, காவல்துறையும், மருத்துவமனைகளகும் பேருதவி புரிந்தன.
ஹிதேந்திரனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளால் ஐந்து பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது.
இந்த உறுப்பு தானம் தமிழகத்தையே உலுக்கி விட்டது. முதல்வர் கருணாநிதி முதல் அத்தனை தலைவர்களும் ஹிதேந்திரனின் பெற்றோரை பாராட்டிப் புகழ்ந்தனர்.
ஹிதேந்திரனின் பெற்றோர் ஏற்படுத்தி வைத்த இந்த அருமையான செயல், தமிழகத்தில் பேரலையை ஏற்படுத்தி இன்று பலரும் மூளைச்சாவை சந்திக்கும் தங்களது குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் விருது கொடுப்பதாக இருந்தால் அதற்கு முழுத் தகுதியும் படைத்தவர்கள் டாக்டர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி என்பதில் சந்தேகமில்லை.