2008ன் முக்கிய சம்பவங்கள்!
இந்தியா, இந்தியர்கள் என்ற பதத்திற்கே பெரும் ஆப்பு வைத்தார் ராஜ் தாக்கரே இந்த ஆண்டு.
மும்பை மராத்தியர்களுக்கே, இங்கு ஒரு வட இந்தியரும் இருக்கக் கூடாது என்ற வெறி முழக்கத்தோடு, பிப்ரவரி 4ம் தேதி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் வன்முறையில் குதித்து மும்பையை ரத்தக்களறியாக்கினர்.
அப்பாவி வட இந்தியர்களை விரட்டி விரட்டித் தாக்கினர். பழ வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், ராஜ் தாக்கரே கட்சியினரின் வெறிக்கு இலக்காகினர்.
ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் மும்பையை விட்டு தங்களது சொந்த மாநிலங்களுக்கு கிளம்பினர்.
நடிகர் அமிதாப் பச்சனின் வீடும் தாக்கப்பட்டது.
ராஜ் தாக்கரேவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக வட இந்திய அரசியல் தலைவர்கள் திரண்டனர்.
சாதாரண தெருச் சண்டையில் ஈடுபட்டாலே கைது செய்யும் போலீஸார், ராஜ் தாக்கரே விஷயத்தில் படா அமைதி காத்தனர். சரத்பவார் உள்ளிட்டோர் மண்ணின் மைந்தரான தாக்கரேவைக் காக்க முயன்றனர்.
ஆனால் எதிர்ப்புகள் வலுத்ததால் ஒரு வழியாக 13ம் தேதி கைது செய்யப்பட்டார் ராஜ் தாக்கரே. ஆனால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
இப்போதைக்கு கலவரம் அடங்கியுள்ள நிலையிலும், இன்னும் நீரு பூத்த நெருப்பாக வட இந்தியர்களுக்கு எதிரான துவேஷம் மும்பையில் இருந்து கொண்டுதான் உள்ளது.
அதை நிரூபிக்கும் விதமாக, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் எத்தனையோ பேர் இறந்த நிலையில் உயிரிழந்த மராத்திய காவல்துறையினருக்கு தான் அஞ்சலி செலுத்துவதாக இன வெறியுடன் பேசினார் ராஜ் தாக்கரே.