2008ன் முக்கிய சம்பவங்கள்!
தமிழகத்தை இதுவரை இல்லாத அளவுக்கு இருளில் மூழ்கடித்த ஆண்டு 2008. எங்கு பார்த்தாலும் கரண்ட் இல்லை என்பதே 'Current' பிரச்சினையாக இருந்தது.
பெய்ய வேண்டிய மழை பெய்யத் தவறியதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது.
நகர்ப்புறங்கள் நரகமாகிப் போகும் அளவுக்கு மின்தடை வாட்டி எடுத்தது.
தினசரி இத்தனை மணி நேரத்திற்கு மின்சாரம் கிடையாது என்று அரசு பகிரங்கமாக பட்டியலிட்டு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போனது.
கிராமப்புறங்களில் விவசாயம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நகர்ப்புறங்களிலோ தொழில் உற்பத்தி அடி வாங்கியது.
தற்போது நிலைமை சகஜமாகி விட்டது. இருந்தாலும், ஜனவரி 1ம் தேதி முதல் தொழில் நிறுவனங்களுக்கு வாரம் இரு நாட்கள் மின் விடுமுறை அளிக்கப்படும் என இப்போதே அடுத்த ஆண்டுக்கான 'ஷாக்'கை அட்வான்ஸாக கொடுத்து விட்டார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.