2008ன் முக்கிய சம்பவங்கள்!
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பெரும் அலைகளை ஏற்படுத்திய ஒப்பந்தம்.
மன்மோகன் சிங் அரசுக்கு எமனாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பு ஒப்பந்தம்.
அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்த அறிவிப்பு வெளியானதுமே இடதுசாரிகள் அதற்கு 'ரெட் கார்டு' போடத் தொடங்கினர்.
ஆனாலும் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி விடலாம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நினைத்தது. ஆனால் இடதுசாரிகளோ படு வீம்பாக இருந்ததால், அவர்களை மீறி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துணிந்தது மன்மோகன் சிங் அரசு.
இதனால் கடுப்பான இடதுசாரிகள், ஜூலை 9ம் தேதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
ஆனால் தக்க சமயத்தி்ல கை கொடுத்தனர் சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவும், அவரது அடிப்பொடி அமர்சிங்கும். கூடவே சிபு சோரனும் சேர, இடதுசாரிகள் வைத்த புள்ளியை, கமாவாக்கி ஜூலை 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது மன்மோகன் சிங் அரசு.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் பாஜக எம்.பிக்கள் பணக்கட்டுக்களை கொண்டு வந்து கொட்டியபோது நாடே பதறிப் போனது. அந்த விசாரணையும் இப்போது முடிந்து, குற்றம் சாட்டப்பட்ட அமர்சிங்கும், அகமது படேலும் அப்பாவிகள் என கூறி விட்டனர்.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பரிசீலித்துப் பார்த்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும், என்.எஸ்.ஜி. அமைப்பும், இந்தியாவுக்குப் பச்சைக் கொடி காட்ட அணுத் தனிமையிலிருந்தும் விடுபட்டது இந்தியா.
இப்படியாக பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு வழியாக, இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.