நெல்லை பல்கலையில் 'கரிசல் திரை விழா'
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (24ம் தேதி) கரிசல் திரை விழா தொடங்குகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையின் மனோ மீடியா சார்பில் கரிசல் திரை விழா 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கலை இலக்கிய போட்டிகளும் நடக்கின்றன.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கற்றது தமிழ் திரைப்பட இயக்குனர் ராம், வேல் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரியன், கன்னட மொழி திரைப்பட இயக்குனர் கிரிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதனை தொடர்ந்து நாளை புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இதனை போட்டோகிராபர் செல்வபிரகாஷ் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் கலந்து கொள்கிறார்.
நிசப்தம் என்ற தலைப்பில் போட்டோகிராபர்களுக்கான போட்டி நடக்கிறது. இதில் பத்திரிக்கை துறை போட்டோகிராபர்கள், அமெச்சூர் போட்டோகிராபர்கள், தொடர்பியல் துறை மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் ஜப்பானிய, இந்திய மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நாளை(25ம் தேதி) டாக்குமென்டரி படங்கள், வினாடி வினா போட்டி ஆகியவை நடக்கிறது.
நிறைவு விழாவில் நெல்லை கலெக்டர் கோ.பிரகாஷ் கலந்து கொள்கிறார்.