திருவையாறில் தியாகராஜரின் 161வது ஆராதனை விழா நாளை துவக்கம்!
திருவையாறு: திருவையாறில் தியாகராஜரின் 161வது ஆராதனை விழா நாளை துவங்க உள்ளது.
தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான ஆராதனை விழா, நாளை மாலை 5 மணிக்கு இஞ்சுக்குடு கணேசன், ராமதாஸ் நாதஸ்வரம், ராதா கிருஷ்ணன் ஆகியோரின் தவில் மங்கல இசையுடன் துவங்குகிறது.
தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார் இந்த விழாவுக்கு தலைமை வகிக்கிறார். சட்டீஸ்கர் மாநில ஆளுனர் நரசிம்மன் விழாவை துவக்கி வைக்கிறார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தஞ்சை மாவட்ட கலெக்டர் விஜயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். இவ்விழா வரும் 27ம் தேதி வரை நடைபெறும்.