கட்டபொம்மன்-புறக்கணித்த அரசியல்வாதிகள்-அதிகாரிகள்
ஓட்டப்பிடாரம்: வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழா பாஞ்சாலங்குறிச்சியில் நடந்தது. ஆனால் அதில் கலந்து கொண்டால் பதவி பறி போகும் என்ற மூட நம்பிக்கையால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 249வது பிறந்தநாளையொட்டி அவரது குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலையும் அணிவிக்கப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சியில் பஞ்சாயத்து தலைவர் லதா கருணாநிதி, கட்டபொம்மன் சந்ததியினர், குடியிருப்பு தலைவர் கிருஷ்ணசாமி, கோட்டை பொறுப்பாளர் சாமுவேல் பாலசேகர், பஞ்சாயத்து உதவியாளர் சுப்பிரமணியன், கோட்டை அலுவலர் சந்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணியினர், ஊமைத்துரை தொண்டர் படையினர், கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் கட்டபொம்மன் சந்ததியினர் குடியிருப்பில் உள்ள நினைவரங்கில் பெண்கள் பொங்கலிட்டு வீரசக்கதேவி ஆலய கொடியேற்றி வழிபாடு செய்தனர். சிறுவர்-சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவிற்கு உள்ளூர் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வருவதில்லை. கட்ட பொம்மன் கோட்டைக்கு வந்தால் பதவி பறிபோய்விடும் என்ற மூடநம்பிக்கையே இதற்குக் காரணம்.
பெரியாரின் தொண்டர்களான திமுகவினரின் ஆட்சி நடக்கும் நிலையில், மூடநம்பிக்கையை தகர்க்கும் வகையில் இந்தாண்டு விழாவிற்கு அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், திமுகவினரும் வர வேண்டும், வருவார்கள் என்று கட்டபொம்மன் வாரிசுகள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கீதா ஜீவன், தொகுதி எம்பி ராதிகா செல்வி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கூட வரவில்லை.
இதுகுறித்து கட்டபொம்மன் வாரிசுதாரர்கள் கூறும்போது கட்டபொம்மன் பிறந்த நாள் விழா எளிய முறையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சாதாரண விழாவில் கூட கலந்து கொண்டு விளம்பரம் தேடும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நாட்டிற்காக பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காததது வேதனையளிக்கிறது.
தேர்தல் வரும்போது மட்டும் இங்கு வந்து கேட்கும் அரசியல்வாதிகள், மீண்டும் இங்கு வந்து கேட்டால் வரும் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர் ஆதாங்கத்துடன்.
திமுக ஆட்சி காலத்தில் புதுபிக்கப்பட்ட கட்டபொம்மன் கோட்டை சிலைகளை திமுக அமைச்சர், எம்பிக்களே புறக்கணிப்பு செய்துள்ளது கவலைக்குரிய விஷயம்தான்.