தமிழச்சி தங்கப்பாண்டியனின் பேச்சரவம் கேட்டிலையோ'
கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் பேட்டி எடுத்தவர்களிடம் அவர் அளித்த பதில்களும், உரையாடல்களும் தொகுக்கப்பட்டு புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் நடந்தது.
விழாவில், அமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
இந்த நூலில் ஏராளமான கருத்துகள் முற்போக்கு சிந்தனையுடன் உள்ளன. பகுத்தறிவுக் கோட்பாடுகளும், சமத்துவ சிந்தனைகளும் நிறைந்துள்ள இந்தப் புத்தகம் அனைத்து திராவிட இயக்க தோழர்களும் படிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியனின் முயற்சி தொடரவும், அவை வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன் என்றார்.
முன்னிலை உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், ஆங்கில இலக்கியம் படித்து ஆங்கிலத் துறை பேராசிரியையாகவும் பணியாற்றிய சுமதி, தமிழச்சியாக இருப்பது மகத்தான பெருமையாகும். நான் நானாக இருக்கிறேன் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அவர் நிரூபித்துள்ளார். இதைப் போல பல்வேறு நூல்களை அவர் எழுத வேண்டும் என்றார்.
கவிஞர் கனிமொழி பேசுகையில், தமிழச்சி தங்கப்பாண்டியன் இந்த புத்தகத்தில் பல விஷயங்களை மிக தெளிவாக, தைரியமாக முன் வைத்துள்ளார். பெண்களுக்கு படிக்கத் தெரியாது, உலக சரித்திரம் தெரியாது, அக்கம், பக்கம் பற்றி அக்கறை இல்லை என்ற கருத்தை இந்த புத்தகம் மூலம் உடைத்துள்ளார். பெண்ணின் உடலை வக்கிரங்களுடனும், போக பொருளாகவும் சமூகமும், படைப்புகளும் பார்ப்பதை அவர் திட்டவட்டமாக எதிர்த்துள்ளார் என்றார்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், எனது வேர் திராவிட இயக்கம். கிராமத்துப் பெண், தமிழச்சி என்று என்னை அடையாளம் காட்டிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெரியார், அண்ணா, முதல்வர் கருணாநிதி போன்றவர்கள் இல்லை என்றால் இந்த மேடை எனக்கு கனவாகவே இருந்திருக்கும் என்றார்
விழாவில், திருச்சி எம்.பி சிவா, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மா.ராஜேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் அருள்மொழி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.