முஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் யோகா செய்வது, வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது ஆகியவற்றுக்கு இந்தோனேசிய உலமா கவுன்சில் தடை விதித்துள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய மத அமைப்பா உலமா கவுன்சில் சமீபத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் யோகா முஸ்லீம் மத நம்பிகைகக்கு விரோதமானது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், முழுமையான தடையை அவர்கள் விதிக்கவில்லை. இதுகுறித்து உலமா கவுன்சில் எடுத்த முடிவில், இந்தோனேசிய முஸ்லிம்கள் யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே செய்ய வேண்டும். அதோடு இணைந்து வேத மந்திரங்களை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படி வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது, முஸ்லிம் மத சட்டங்களுக்கு எதிரானது. இதனால் முஸ்லிம் மக்கள் வேறு மதத்தினரின் நம்பிக்கையை பின்பற்ற நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு யோகா ஆசிரியர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பான்டுங் நகரில் யோகா மையம் நடத்தி வரும் புஜியஸ்ததி சிந்து என்பவர் கூறுகையில், யோகாவுக்கு யாரும் தடை விதிக்கமுடியாது. யோகா செய்பவர்கள் வேறு மத கடவுளை வழிபடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறு.
அதற்கு அவர்களுக்கு யோகாவை பற்றி தெரியாததே காரணம். அவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஜகார்த்தாவில் உள்ள பிகாராம் யோகா மையத்தை சேர்ந்த மோனி சுரியானி என்ற கிறிஸ்தவர் கூறுகையில், சில சமயங்களில் நானும் மந்திரங்களை உபசரித்து வருகிறேன். இதனால் எனது மத நம்பிக்கை குறைந்துவிடாது என்றார்.
ஏற்கனவே மலேசியாவிலும் இதேபோல யோகாவுக்கு முஸ்லீம் மத குருமார்கள் தடை விதித்தது நினைவிருக்கலாம்.