பழனி தைப்பூசம் - இன்று தேரோட்டம்
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள்தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. மேலும், தைப்பூசத் திருநாளன்றுதான் சூரனை வதம் செய்ய பார்வதி வேல் கொடுத்து நாளும் இதுவே. பழனி மலையில் வைத்துத்தான் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தார் பார்வதி.
எனவே பழனியில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகப் பெருமானின் தலங்களை விட விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பழனி பால தண்டாயுதபாணி கோவில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று மாலை நடந்தது. இன்று தைப்பூசம் ஆகும்.
இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது.
இன்று மாலை முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டத்தை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் தைப்பூச உற்சவம்
இதற்கிடையே, மலேசியாவின் புகழ் பெற்ற பட்டுக் குகை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா உற்சாகத்துடன் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மக்கள் கூடி நின்று முருகப் பெருமானை தரிசித்தனர்.
மலேசியாவில் 3 நாள் விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்கு பத்து லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடிகள் எடுத்து கோவிலுக்கு வந்தனர். பலர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தனர். ஆயிரக்கணக்கானோர் முடி காணிக்கையும் செய்தனர்.
தைப்பூசத்தையொட்டி அங்கு ரத்ததான முகாம்கள், உறுப்பு தான விழிப்புணர்வு முகாம்களும் நடைபெற்றன.