பழனியில் தைப்பூச கோலாகலம் - தேரோட்டம்- லட்சம் பக்தர்கள் கண்டுகளிப்பு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்தே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நேற்று தைப்பூசம் ஆகும். இதையொட்டி பழனி மலைக்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு முத்துக் குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து பழனி சண்முக நதிக்கு எழுந் தருளினார். அங்கு பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷலக்னத்தில், பூ மற்றும் துணி வேலைப்பாடுகள் செய் யப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.
மாலை 4.25 மணிக்கு நான்கு ரத வீதிகளில் தைப்பூச தேரோட்டம் நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில் யானை கஸ்தூரி தேரினை முட்டித்தள்ளி தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தது.
தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் ரதவீதி களை வலம் வந்த போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுத பாணிக்கு அராகரா என்று பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.
இரவு 7.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி தந் தப்பல்லக்கில் எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தைப்பூசத்தையொட்டி பழனி முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக இருந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
கோவை, ஈரோடு, தாராபுரம், பல்லடம், குண்டடம், உடுமலை, கோபி, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் திடும் எனப்படும் இசைக்கருவிகள் விண்ணதிர முழங்க சண்முகநதி, உடு மலை ரோடு, பெரியநாயகி அம்மன் கோவில், கிரி வீதிகள், மலைக்கோவிலில் காவடியாட்டம் ஆடினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடிகளுடன் வந்து முருகனை வணங்கினர்.
பக்தர்கள் மலர் வேலைப் பாடுகளுடன் கூடிய நட்சத்திர அலகு காவடிகளை எடுத்து வந்து இருந்தனர். உடல் முழுக்க எலுமிச்சம் பழம்,விபூதி பாக்கெட்டுகளையும் குத்தி வந்து இருந்தனர்.
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.
கடந்த 2 நாட்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பழனி கோவிலில் சாமி தரிச னம் செய்ததால் பழனி நகர் குலுங்கியது. பழனி தைப்பூச திருவிழா வருகிற 11-ந்தேதி தெப்ப உற்சவம் மற்றும் கொடி இறக்குதலுடன் நிறைவு பெறுகிறது.