தீண்டாமைக்கு குட்பை சொன்ன கிராமத்துக்கு ரூ. 1லட்சம் பரிசு
மதுரை மாவட்டம் பேரையூர் தாலூகாவில் பழையூர் கிராம ஊராட்சி உள்ளது. இதில் கரிசல்பட்டி, கட்டாரப்பட்டி ஆகிய உள் கிராமங்கள் அடங்கியது.
இங்கு ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர், பிற்பட்ட மற்றும் இதர வகுப்பினர் 368 குடும்பங்களைச் சேர்ந்த 2117 பேர் வசிக்கின்றனர்.
இந்த ஊரில் போய் தீண்டாமை என்ன என்று கேட்டால் அங்குள்ள மக்கள் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு இங்கு சமத்துவம் கொடி கட்டிப் பிறக்கிறது.
ஆதி திராவிட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், பிற சமூகத்தைச் சேர்ந்த மக்களுடன் கலந்து கோவில் திருவிழாவின்போது அனைவரும் சம்மாக பொங்கலிட்டு வழிபடுவது, மற்ற பொது விழாக்களிலும் பாகுபாடின்றி கலந்து கொண்டு ஒற்றுமையுடன் இருப்பது, ஒரே மயானம் பயன்படுத்திக் கொள்வது என்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாக சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இக்கிராம மக்களின் வளர்ச்சிக்காக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ 1 லட்சம் பரிசாக தமிழக அரசு வழங்கியுள்ளது. பழையூர் கிராம ஊராட்சித் தலைவர் வை.பாண்டியன் இந்த மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்கிறார்.
ஊர் மக்களின் சார்பாக ஊராட்சி தலைவர் வை. பாண்டியனிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.சீத்தாராமன் வழங்கினார்.
இந்த பரிசு வருடத்திற்கு ஒருமுறை ஒரு மாவட்டத்திற்கு வழங்கப்படும். இந்த வருடம் தீண்டாமை அறவே இல்லாமல் ஒழித்துக்கட்டி, நல்லிணக்கத்துடன் வாழும் பழையூர் கிராம மக்களுக்கு 2008 -2009-க்காக வழங்கப்பட்டது.
இதே பேரையூர் அருகேதான் தீண்டாமையால் பிளவுபட்டிருக்கும் உத்தப்புரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது - வேதனையுடன்.