கூந்தன்குளத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
நெல்லை: நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.
நெல்லையிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூந்தன்குளத்தில் 1994ம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கூந்தன்குளத்திற்கு சைபீரியா, நைஜிரியா, பிலிம்பைன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.
கூந்தன்குளத்தில் சீசன் காலத்தை ஓட்டி தற்போது பின்டைல், பிளாங்குவிடு, ஸ்டில், கிரேகிரைன், வக்ரா, கான்டீடல், செங்கல்நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் நாரை உள்ளிட்ட பல பறவைகள் குவிய துவங்கியுள்ளன.
பொதுவாக வெளிநாடுகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும்போது இனப்பெருக்கத்திற்காக பறவைகள் இடம் பெயர்ந்து கூந்தன்குளத்திற்கு வருகின்றன.
ஜனவரி துவங்கி ஆகஸ்ட் வரை கூந்தன்குளத்தில் பறவைகள் தங்கியிருந்து செல்கின்றன. கடந்த ஆண்டு சீசன் காலத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 618 பறவைகள் இங்கு வந்து சென்றுள்ளன.
கூந்தன்குளத்தில் தற்போது சீசன் காலம் துவங்கியுள்ளதை ஓட்டி வரத்துவங்கியுள்ள பறவைகள் குளம் மற்றும் ஊர் பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு வருகின்றன. இவை குஞ்சு பொறித்த பின்னர் சீசன் முடியும் தருவாயில் தாயகம் திரும்பும்.
கூந்தன்குளத்தில் தற்போது சுற்றுலா பயணிகளும் குவிய துவங்கியுள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுலாதலமான கூந்தன்குளத்திற்கு வந்து பறவைகளை பார்த்து செல்கின்றனர்.
இஙகு காடன்குளம், கண்ணன்குளம், கூந்தன்குளம் என 3 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் தன்மையை பொறுத்தே அதிகளவு பறவைகள் வந்து செல்கின்றன.
குளங்களில் தண்ணீர் அதிகமாக காணப்பட்டால் பறவைகளுக்கு தேவையான மீனின் வரத்தும் அதிகமாக இருக்கும். மேலும் பறவைகள் இனப்பெருக்கம் செய்ய வசதியாக இருக்கும். இக்குளங்களின் கரையை வனத்துறை 2 லட்சம் செலவில் பலப்படுத்தி வருகின்றன.
ஆனால் குளங்களில் போதிய தண்ணீர் வரத்து இல்லை. எனவே இந்த ஆண்டு பறவைகள் வரத்து குறையக் கூடும் என உள்ளூர் வாசிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.