இலங்கை தமிழர்களைக் காக்க கோரி 6 பார்வையற்றோர் நடைபயணம்!
மதுரை: இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியபம் பார்வையற்ற 6 பேர் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பார்வையற்றோர் சேவை மையத்தைச் சேர்ந்த மாரிசாமி, வீரப்பன், ஆறுமுகம், நாகராஜ், சக்திவேல் மற்றும் ஜஸ்டின் மாரிமுத்து ஆகிய 6 பார்வை இல்லாதவர்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, வழியாக கன்னியாகுமரிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சியைச் சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் படுகொலையை கண்டித்து கோஷம் எழுப்பியபடியே நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் இந்த செயல் இலங்கை தமிழர்கள் மீது தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.