கும்பாபிஷேகம்-தயாராகும் பொற்றாமரைகுளம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கு காப்புகட்டும் விழா வரும் 26ம் தேதி நடக்கிறது.
சுமார் ரூ.9 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்தத் திருப்பணிகளில் தற்போது கடைசிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. வரும் 25ம் தேதிக்குள் இது முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
கும்பாபிஷேகத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே வரும் ஏப்ரல் 2ம் தேதி யாக பூஜைகள் துவங்குகின்றன.
கோவிலின் வெளிப்பகுதியில் மாணிக்கப்பட்டை தீட்டும் வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக சுமார் 30 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் சுமார் 2.5 லட்சம் செலவில் நடக்கிறது.
கும்பாபிஷேகத் திருப்பணிகளில் முக்கியமானதான வரலாற்று சிறப்புமிக்க பொற்றாமரைக் குளம் சீரமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. தொன்மைமிக்க இக்குளத்தைச் சுற்றிய வளாகத்தில் உள்ள தூண்கள் நவீன முறையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதை தவிர்த்து சுவாமிகள் வீதி உலா வரும் அன்னம், சிம்மம், பூதம் ஆகிய வாகனங்கள் புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.