கச்சத் தீவு: புனிதப் பகுதி-இலங்கை அறிவிப்பு
இந்தியா, இலங்கைக்கு இடையில் இருக்கும் தீவு பகுதி கச்சத்தீவு. 1974ல் இது இந்திய அரசால் இலங்கைக்கு விட்டுகொடுக்கப்பட்டது. இங்கு அதிக மீன்கள் கிடைப்பதால் தமிழகம் மற்றும் இலங்கை பகுதியில் இருந்து இங்கு அதிக மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது உண்டு.
சமீபகாலமாக ஈழ பிரச்சினை காரணமாக இங்கு மீ்ன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுகின்றனர். இதையடுத்து கச்சத்தீவு பகுதி மீண்டும் இந்தியாவுடன் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த பகுதியை புனித இடமாக அறிவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இங்குள்ள ஒரே கட்டிடமான புனித அந்தோணியர் ஆலயத்தை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆலயத்துக்கு ராமநாதபுரம் மற்றும் இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து ஆட்கள் வந்து செல்கின்றனர். மற்ற நேரங்களில் இந்த தீவு மீனவர்கள் வலையை காயப்போடும் ஒரு இடமாகவே இருந்து வருகிறது.