மறைந்த இலங்கை பத்திரிக்கையாளருக்கு யுனெஸ்கோ விருது
கொழும்பு: யுனெஸ்கோ அமைப்பின் உலக பத்திரிகை சுதந்திரம் விருது இந்தாண்டு தமிழர்களுக்கு ஆதரவாக எழுதிய காரணத்தால் சுட்டு கொல்லப்பட்ட இலங்கை பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்கே, இவர் சிங்களராக இருந்தாலும் அங்கு தமிழர்கள் படும் அவலத்தை நினைத்து தான் ஆசிரியராக வேலை பார்க்கும் பத்திரிகையில் எழுதி வந்தார். இதையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையும் மீறி அவர் தொடர்ந்து தைரியமாக தமிழர்களுக்கு ஆதரவு அளித்து எழுதி வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரியில் அவர் மர்ம நபர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார். தான் விரைவில் கொல்லப்பட்டு விடுவோம் என்பதை நன்கு அறிந்திருந்த அவர் சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எனது சாவுக்கு இலங்கை அரசு தான் காரணம் என குறிப்பு எழுதி வைத்திருந்தார்.
தமிழர்களை ஆதரித்த ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்ட அவருக்கு யுனெஸ்கோ அமைப்பு இந்த ஆண்டுகாகன உலக பத்திரிகை சுதந்திரம் விருது வழங்கியுள்ளது. இந்த விருதுக்கு இவரை தேர்ந்தெடுத்து குழுவின் தலைவர் லசந்தா அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என கூறியுள்ளார்.
இந்நிலையில் அம்னஸ்டி அமைப்பு செய்தி குறிப்பு ஒன்று கூறுகையில், இலங்கையில் 2006க்கு பின்னர் 14 பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர். கொலை மிரட்டல் காரணமாக 20 பேர் நாட்டை விட்டே ஓடிவிட்டனர் என்கிறது.