சோலைமலை முருகனுக்கு தேர் செய்ய 12 கிலோ தங்கக் கட்டி
மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோயில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் தங்கத்தேர் செய்ய, 11 கிலோ 800 கிராம் தங்கம் வாங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அழகர்கோயில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயில் உள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் 6 வது படைவீடு ஆகும்.
இந்த கோயிலுக்கு தங்கத்தேர் செய்ய, 11 கிலோ 800 கிராம் தங்கம் தேவைப்பட்டது. இந்த தங்கத்தை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வாங்க, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
அதன்படி, சோலை மலை முருகன் கோயில் துணை ஆணையர் இளம்பரிதி, மதுரை மண்டல நகை சரிபார்க்கும் அதிகாரி கோவிந்தராம் சமயபுரம் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு, திருச்சி மண்டல நகை சரிபார்க்கும் அதிகாரி கல்யாணி முன்னிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணப்பன், கோயில் இணை ஆணையர் பாரதி ஆகியோர் 11 கிலோ 800 கிராம் தங்கத்தை, 100 கிராம் எடையுள்ள 118 கட்டிகளாக அவர்களிடம் கொடுத்தனர். இதற்கான தொகை ரூ.1 கோடியே 80 லட்சத்திற்கான வரைவோலை பெற்றுக் கொள்ளப்பட்டது.
இவை அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என்பது குறிப்பிடதக்கது