ஸ்டாம்ப் வெளியிட்டு பெண்கள் ஓட்டு வேட்டை!
கரூர் தொகுதியில், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு சவால் விடும் அளவில் பெண்கள் முன்னணி என்ற அமைப்பு போட்டியிடுகின்றது. இந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் டான்யா கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
டான்யா கிராமப்புற மக்களை குறிவைத்து ஓட்டு வேட்டையாடி வருகின்றார். இவருக்கு பின்னணியில் சுவாதி பெண்கள் இயக்கம் செயல்படுகின்றது.
இந்த சுவாதி பெண்கள் இயக்கத்தின் சார்பில் பூரண மது விலக்கு, ஆற்றில் மணல் அள்ள தடை, போன்ற பல வியக்க வைக்கும் போராட்டத்தை கரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவில் நடத்தியுள்ளனர்.
இந்த அமைப்பில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக்குழுவினர் உள்ளனர். இதனால் கிராம பெண்களின் ஆதரவு இவருக்கு பெருகி வருகின்றது.
திமுக, அதிமுக போன்ற பண பலம் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கும் போது உங்களுக்கு வெற்றி எப்படி கிடைக்கும் என நம்புகின்றீர்கள் என்று டான்யாவிடம் கேட்டபோது, நான் செலவு செய்து தேர்தலில் நிற்கவில்லை. பெண்கள் முன்னேற்றத்திற்காக, உரிமைக்காக பெண்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நிற்கின்றேன்.
நாங்கள் நேர்மையான தேர்தலை விலிறுத்தி 5 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளோம். அந்த, ஸ்டாம்பை மக்களிடம் விற்பனை செய்து, அந்த பணத்தில் இருந்து தேர்தல் செலவு செய்து வருகின்றோம்.
பல வேட்பாளர்களை ஊர் மக்கள் உள்ளே விட மறுத்துள்ளனர். பெண்களின் பரி பூரண ஆசி இருப்பதால் எனது வெற்றி உறுதி என்று நம்பிக்கை பொங்க சொல்கின்றார்.