பெண்கள் 5வது நாள் உண்ணாவிரதம்- 3 பேர் உடல் நலம் பாதிப்பு
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், அப்பாவித் தமிழர்களை கொல்வதை நிறுத்த வேண்டும், இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பேராசிரியை சரஸ்வதி தலைமையில் சென்னை கொளத்தூரில் நூறு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. ஆனால் இதை போலீஸார் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரத இடத்தை மாற்றி இருந்து வருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். நேற்றுடன் நான்கு நாட்கள் ஆனதால், சில பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பலர் சோர்வுடன் காணப்பட்டனர்.
சென்னை கவிதா(30), தேனி சித்ரா(40), காஞ்சீபுரம் சசிகலா(30) ஆகியோரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
உண்ணாவிரதம் மேலும் நீடித்தால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
போராட்டம் நடைபெறும் இடத்தில் கிராமியக் கலைஞர்கள் தாரை, தப்பட்டைகளை வாசித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை வாழ்த்தி பாராட்டினர். முழு ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
உண்ணாவிரத்தில் இருந்து வரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் பாண்டிமாதேவி கூறுகையில், உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த இடத்திற்கும் போலீசார் அனுமதி மறுத்தால் மறியல் போராட்டத்தில் குதிப்போம்.
சென்னைக்கு 20-ம் தேதி சோனியா காந்தி வருகிறார். அப்போது அவரைச் சந்தித்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படக் கோரி வலியுறுத்துவோம். எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றார்.