நாளை ஆற்றில் இறங்குகிறார் அழகர்-இன்று எதிர் சேவை
கடந்த 5ம் தேதி அழகர்கோவிலில் சித்திரை விழா துவங்கியது. மறுநாள் 6ம் தேதி அங்கு வரதராஜ பெருமாளுக்கு பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் கள்ளழகர் வேடம் கொண்டு அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பினார்.
காவல் தெய்வமான கருப்பண்ணசாமி விற்றிருக்கும் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ புறப்பட்டார். பொய்கைகரைப்பட்டி, கள்ளக்குறிச்சி, அப்பன் திருப்பதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
இன்று மதுரை வந்த அவருக்கு காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்களின் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எழுந்தருளும் கள்ளழகர் மாலையில் தல்லாகுளம் அவுட்போஸ்ட்டில் எழுந்தருளுகிறார். அங்கும் அவருக்கு எதிர்சேவை நடத்தப்பட இருக்கிறது.
பின்ன்ர் அவர் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடைகிறார். அங்கு இரவு 12 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
நாளை ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் மதுரை கருப்பண சுவாமி கோவிலில் இருந்து அதிகாலை 3 மணிக்கு வைகை ஆற்றுக்கு புறப்படும் கள்ளழகர் காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் நடக்கும் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து வண்டியூர் செல்லும் கள்ளழகர் அங்குள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் இரவு 11 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
நாளை மறுநாள் மே 10ம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். 11ம் தேதி இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12ம் தேதி கள்ளழகர் மீண்டும் அழகர் கோவிலுக்கு புறப்படுகிறார்.