தாமிரபரணியை சுத்தப்படுத்த கைகோர்க்கும் இஸ்ரோ-அண்ணா பல்கலை
இந்தப் பணிக்காக தாமிரபரணி நதியை செயற்கைக் கோள்கள் மூலம் இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையம் (Isro's Hyderabad-based National Remote Sensing Agency) ஆராயும்.
இது குறித்து இந்த மையத்தின் இயக்குனர் ஜெயராமன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியாதவது:
தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. ஆனால், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்னும் 50 ஆண்டுகளில் சாப்பிட உணவு இருக்குமா என்ற அளவுக்கு விவசாயம் கேள்விகுறியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் புதிய தொழில்நுட்ப உதவியுடன் நீர்க்குட்டைகள் அமைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நல்ல பலனை கொடுத்துள்ளது. இந்த திட்டத்தை பல்வேறு நாடுகள் பின்பற்ற உள்ளன. நீர்குட்டைகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவி வெப்பமாதல் தற்போது உள்ள மிகப்பெரிய சவாலாகும். ஆண்டுக்கு ஆண்டு 2 டிகிரி வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் கடல் நீர் மட்டம் 3 மி.மீ. அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கடல் நீர்மட்டம் அதிகரித்தால் உலகிற்கு மிக பெரிய ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தில் இருந்து பாதுகாக்க புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இளைஞர்கள் முன் வர வேண்டும்.
காற்றாலை, கடல் அலை மின் உற்பத்தி, சூரிய ஒளி ஆகியவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் புண்ணிய நதியான தாமிரபரணி மாசுபடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நாங்களும் உதவுவோம்.
தொடர்ந்து தாமிரபரணி மாசுபடுவதை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அண்ணா பல்கலைக்கழகமும் நாங்களும் இறங்கவுள்ளோம் என்றார்.