மலேசிய அரசுக்கு ஹின்ட்ராப் தலைவர் உதயமூர்த்தி கெடு
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலை ஆன பின்னரும், உதயக்குமாரை மலேசிய அரசு நெருக்கி வருகிறது. இது சரியல்ல. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடடால், தமிழர்கள் மீண்டும் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த உதயக்குமார் உள்ளிட்ட ஹின்ட்ராப் தலைவர்கள் சமீபத்தில்தான் பிரதமர் ரஸ்ஸாகின் உத்தரவைத் தொடர்ந்து விடுதலையாகினர்.
இந்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்புச் சட்ட ஆலோசனைக் குழு விசாரணைக்கு ஆஜராகுமாறு உதயக்குமாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைததான் உதயமூர்த்தி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது லண்டனில் வசித்து வரும் உதயமூர்த்தி கூறுகையில், கமுன்டிங் சிறையிலிருந்து நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட, உதயக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருப்பது சட்டவிரோதமானது, அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது.
இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நஜீப் (பிரதமர்) அரசுக்கு எதிராக மீண்டும் ஹின்ட்ராப் அமைப்பு போர் தொடுக்க வேண்டி வரும்.
உதயக்குமாரை மீண்டும் கைது செய்யும் நோக்கில்தான் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.
இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் நிறுத்தி வைத்துள்ள எங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்க நேரிடும். தெருவில் இறங்கிப் போராடும் நிலை உருவாகும்.
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மலேசிய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரியான, புத்திசாலித்தனமான நடவடிக்கைளை அது மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் தற்போதைய புதிய அரசு அதுபோல செயல்படுவதாக தெரியவில்லை. மாறாக முந்தைய அரசின் செயல்பாடுகளைப் போலவே இதன் செயல்பாடும் தோன்றுகிறது.
உதயக்குமாரை விடுதலை செய்தபோது பிரதமர் நஜீப்பும், உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசேனும், உதயக்குமார் உள்ளிட்டோர் இனியும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக இல்லை என்று தெரிவித்தார்கள் என்பது நினைவிருக்கலாம் என்றார்.
இதற்கிடையே தான் அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை, கமுன்டிங் சிறையில் உள்ள உள்நாட்டு தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனைக் குழுவின் விசாரணைக்கு தான் போகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உதயமூர்த்தி விரைவில் மலேசியா திரும்பப் போகிறார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினர் நடத்திய மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து உதயமூர்த்தி நாட்டிலிருந்து வெளியேறினார். தற்போது லண்டனில் தங்கியுள்ளார்.
உதயக்குமார் கைதாவாரா..
இதற்கிடையே அரசு உத்தரவுப்படி உதயக்குமார் விசாரணைக்கு வராவிட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டிஐஜி இஸ்மாயில் உமர் எச்சரித்துள்ளார். இருப்பினும் இதுவரை உதயக்குமாரை கைது செய்வதற்கான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உதயக்குமார் உள்ளிட்ட ஹின்ட்ராப் தலைவர்கள் கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி மலேசியாவையே அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.
புதுக் கட்சி உதயம்..
இதற்கிடையே ஹின்ட்ராப் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தானேந்திரன் என்பவர் மலேசியத் தமிழர்களுக்காக புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். இக்கட்சிக்கு மக்கள் சக்தி கட்சி என பெயரிடப்பட்டுள்ளது.
தானேந்திரன் இதன் தலைவராக இருப்பார். கண்ணன் ராமசாமி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ராமசாமி கூறுகையில், ஹின்ட்ராப் தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ளது. எனவே இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
ஹின்ட்ராப் அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம் என்றார் அவர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உதயமூர்த்தி, தானேந்திரனின் புதிய அரசியல் பிரவேசத்தை நான் பாராட்டுகிறேன்.
உதயக்குமார் சிறையில் வாடியபோதும், நான் லண்டனில் இருந்தபோதும், ஹின்ட்ராப் அமைப்பை வழி நடத்தி் சென்றவர் தானேந்திரன்தான்.
எனவே தானேந்திரனையும், பிறரையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களது முயற்சிகள் வெற்றி அடையட்டும் என்றார்.